ஒரு அரசு ஊழியரைப் பார்த்து ”அரசு ஊழியர்கள் என்றாலே கருணாநிதிக்கு செல்லப் பிள்ளைகள் போல. ஆனால் அவர் ஆட்சியில் தானே அதிகப் போராட்டம் செய்கிறீர்கள்” – என்று கேட்டேன். உடனே அவர் “ சார் அம்மான்னா எல்லாருக்கும் பயம்தான்.. கொஞ்சம் முறைத்தாலும் உள்ளே பிடித்து போட்டு விடுவார். அப்புறம் அலைய வேண்டியதுதான். கருணாநிதி ஆட்சியில் போராட்டம் செய்தால் சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவார். அவ்வளவுதான்.” என்றார்.
நமது காம்ரேடுகள் தேர்தல் சமயங்களில் யாருடனாவது நிச்சயம் ஒரு கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். கருணாநிதியுடன் கூட்டு என்றால் ரொம்ப கம்பீரமாகச் செல்வார்கள். அவர் முன்னர் உட்கார்ந்து பேசும் காட்சியே சாட்சி சொல்லும். அவரைச் சந்திப்பதற்கு முன்னும் சந்தித்த பின்னும் கொடுக்கும் பேட்டிகள் ரொம்ப சூடாக தன்மானம் தூக்கலாக இருக்கும். ஆனால் அம்மாவிடம் கூட்டணி என்று வைத்துக் கொள்ளுங்கள்... அவர்கள் கார்டனின் கதவுகளை நெருங்கும் சமயம் அலாதியாக இருக்கும். அவர்களையும் அறியாமல் சரீரத்தின் சர்வ நாடிகளும் தளர்ந்து விடும். சோபாவின் நுனியில்தான் அமர்வார்கள். பார்த்து வந்த பின்னர் பேட்டி என்பதே வடிவேல் நகைச்சுவை காட்சியில் வரும் “ துபாய் எங்க இருக்கு?” என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் போல இருக்கும்.
இந்த தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்களே! அவர்களுக்கு கருணாநிதியின் ஆட்சி என்றால் போராட்டம் நடத்துவது வெல்லக் கட்டி சாப்பிடுவது போல. தமிழ் உணர்வு பீறிட்டு எழும். காலையில் கைது பண்ணி கல்யாண மண்டபத்தில் தங்கச் செய்து மாலையில் விட்டு விடுவார்கள். மறுபடியும் அடுத்த போராட்டம். மத்திய அரசையும் இலங்கை அரசையும் சவாலுக்கு அழைப்பார்கள். அம்மா ஆட்சி என்றால் சர்வமும் ஒடுங்கி விடும். நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள்.
பல வலைப் பதிவர்கள் கருணாநிதியின் ஆட்சியில் அவரை கிழி கிழியென்று கிழித்தார்கள். அவர் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி போலவும், அவர் நினைத்து இருந்தால் இலங்கை மீது படையெடுத்து வென்று இருக்க முடியும் என்பது போலவும் எழுதினார்கள். மேலும் அம்மாவை வேறு தமிழ்த்தாய் ஆக சித்தரித்து மகிழ்ந்தார்கள். அந்த வலைப் பதிவர்கள் இப்போது என்ன ஆனார்கள்? ஏதாவது ஒன்று என்றால் மைக்கும் கையுமாக பேட்டிக்காக அலையும் டிவி, பத்திரிக்கை நிருபர்கள் கண்ணில் சகோதரியார் தென்படவே இல்லை.
கூட்டணியில் இருந்தாலும் எதிர்க் கட்சிக்கான கடமையைச் செய்வோம் என்று கருணாநிதியை திட்டுவதையே அறிக்கைகளாக வைத்து இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற கதர் சட்டைக்காரர்கள் டெல்லிக்கு சென்று விட்டார்கள் போல இருக்கிறது. வைகோ களைத்துப் போய் ஓய்வில் இருக்கிறார். அடுத்த கிடுகிடு போராட்டம் நடத்த. மத்திய அரசை மட்டும் எதிர்க்க காரணம் இருந்தால் சொல்லுங்கள். அய்யா ராமதாஸ் முன்பெல்லாம் தைலாபுரத்தில் இருந்து கொண்டே தமிழ் நாட்டிற்காக வெறுங்கையில் “மாதிரி பட்ஜெட்” வாசிப்பார். அம்மாவின் ஆட்சியில் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும். சின்ன பையன்கள் பம்பரத்தை கயிற்றால் சுற்றி நாக்கால் தொட்டு தரையில் வேகமாக விடுவார்கள். அதே போன்று விஜயகாந்திற்கு பம்பரம் சுத்தும் ஆக்ஷன் நன்றாக வரும்.. கருணாநிதியின் கவலையெல்லாம் இப்போதைக்கு கனிமொழிதான். மக்களைப் பெற்ற மகராசன்! புத்திர சோகம் தசரத சக்கரவர்த்தியையே போட்டு உலுக்கியது. அம்மா ஆட்சி என்பது பிஜேபி காரகளுக்கு குஜராத்தில் மோடி இருப்பதைப் போல, இரண்டும் ஒன்றுதான். அம்மாவுக்கு இப்போது டெல்லி ஒன்றே லட்சியம். மற்றவைகள் அலட்சியம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒரு வழக்கு போட்டால் போதும். எல்லாம் சரியாகி விடும்.


