Friday, January 6, 2012

தலித் – என்ற சொல் !



பண்டைய இந்தியாவில் மக்கள் தனித் தனி இனக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவுக்கும் தனிப் பட்ட பழக்க வழக்கங்கள், கடவுள் கோட்பாடுகள். இந்து மதம் என்ற ஒரு பொதுப் பெயரால் அப்போது இவைகள குறிக்கப்பட வில்லை. பின்னாளில் வந்த ஆட்சி மாறுதல்களினால் அனைத்து குழுக்களுக்கும், இந்து அல்லது இந்துமதம் என்ற ஒரு பொதுப் பெயர் உருவானது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1931 இல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 1935 இல் அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம் 1937 இல் நடைமுறை படுத்தப் பட்டது. அதில் ஷெட்யூல்ட் ஜாதி  (Scheduled Caste) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டது. ( Ref :  The Government of  India (Scheduled Castes ) Order 1936 )


பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தாழ்த்தப்பட்டட மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டியல் இன மக்கள் ( Scheduled Caste and Tribes )  என்ற அடையாளம் தந்தனர். இதனை நீட்டி முழக்கி எழுதும் போது நீண்ட பெயராகத் தோன்றியது. எனவே பின்னாளில், காந்தியார்  கடவுளின் பிள்ளைகள்  என்ற அர்த்தத்தில் குறிப்பிட்ட ஹரிஜன் ( Harijan ) என்ற சொல் எளிமையாகவும், இந்தியா முழுமைக்கும்  அடையாளம் காணக் கூடியதாகவும் இருந்தபடியினால் அந்த சொல் ரொம்ப காலம் பயன் பட்டது. மேலும் காந்தியின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக ஹரிஜன் என்ற சொல்லை யாரும் எதுவும் சொல்லாமல் அரசாங்க அங்கீகாரம் பெற்ற சொல்லாக ஏற்றுக் கொண்டனர். அவர் எந்த உள் நோக்கமும் இன்றி சொன்ன அந்த சொல்லுக்கு பிற்பாடு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டது. காந்தியை விமர்சனம் செய்தார்கள். இதனால் முன்னர் சொன்னது போல்  அரசு ஆணையில் குறிப்பிடப்பட்ட வார்த்தையான (பட்டியல் இன மக்கள்) எஸ்.சி/எஸ்.டி ( SC / ST ) என்ற பொதுப் பெயரால் அழைத்தனர்.

தமிழ் நாட்டில் வைணவப் பெரியார் ஸ்ரீ ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களும் மனிதர்களே, மற்றவர்களுக்கு சமமானவர்களே என்று உண்ர்த்த, தாழ்த்தப்பட்டவர்க்ளை திருக்குலத்தார் என்று அழைத்தார். மேலும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்தார். பாரதியாரும் ஒரு தாழ்த்தபட்டவருக்கு பூணூல் போட்டார். இருவரது எண்ணமும் உயரிய ஒன்று. அந்த காலத்து சமூக சூழ்நிலையில் அவர்கள்  செய்த காரியம் பெரிய விஷயம் தான். இதனை விமர்சிப்பவர்களும் உண்டு. திருக்குலத்தார் என்ற அடையாள சொல்தான் பின்னாளில் திருநங்கைகள் என்ற சொல்லுக்கு அடிகோலியுள்ளது. திருக்குலத்தார் என்ற அடையாளச் சொல்லை இப்போது யாரும் பயன்படுத்துவது கிடையாது.

தமிழ் நாட்டில், திராவிட இயக்கங்களின் செல்வாக்கினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர் ( Adi Dravidar ) என்ற சொல்லால் குறித்தனர். ஆனால் நடைமுறையில் பறையர் சமூகத்தினரைத் தவிர மற்ற பள்ளர், அருந்ததியர் சமூகத்தினர் இதனை அதிகம் பயன்படுத்தவில்லை. இதனால் தமிழ் நாட்டில் ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிப்பது போலாயிற்று. எனவே மற்றவர்கள், ஆதிதிராவிடர் என்ற பெயரையே பொதுப் பெயராக வைக்க வேண்டாம் என்று சொல்வதோடு, தமிழ் நாட்டில் ஆதி திராவிடர் நலத் துறை என்ற பெயரையே மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இப்போது தலித் ( Dalit ) என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. ஆனாலும் இந்திய அரசியல் சாசனப்படி தலித் என்ற சொல்லுக்கு அங்கீகாரம் கிடையாது.  தலித் என்ற மராட்டிய சொல்லுக்கு ஒடுக்கப் பட்டவர்கள் என்று பொருள். தலித் என்ற சமஸ்கிருத சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜோதிராவ் புலே ( Jyoti Rao Phule 1827 - 1890 ) என்ற மராட்டிய சமூக சீர்திருத்தவாதி.( படம் ) தலித் என்றால் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, உடைந்த     என்ற அர்த்தத்தில் வரும். தலித் என்ற சொல்லை மக்களிடையே அதிகம் அறிமுகம் செய்தவர் பஞ்சாபில் பிறந்த சீக்கியரான பகுஜன் இயக்க நிறுவனர் கன்சிராம்  ( Kanshi Ram ) அவர்கள்.  ஆரம்பத்தில் தலித் என்ற சொல் சிறுபான்மைப் பிரிவினரான முஸ்லிம் சமுதாய மக்களையும் எஸ்.சி / எஸ்.டி மக்களையும் உள்ளடக்கிய சொல்லாக சுட்டிக் காட்டப் பட்டது. முஸ்லிம் சமுதாய மக்கள் அதனை விரும்பாததோடு தங்களை முஸ்லிம் என்று அழைக்கப் படுவதையே விரும்பினர். ஹரிஜன் என்ற சொல்லுக்கு சரியான மாற்றுச் சொல்லாக தலித் என்னும் சொல் விளங்கியதால் பட்டியல் இனமக்கள் ஏற்றுக் கொண்டனர். மேடைகளிலும் எழுத்துக்களிலும் இந்த சொல் பிரபலமாகி விட்டது. இப்போது யாரும் தலித் என்ற சொல்லை அதன் மராட்டிய மொழியின் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் பார்ப்பதில்லை. SC/ST  என்ற பட்டியலின மக்களுக்கான ஒரு பொதுச் சொல்லாகவே பார்க்கின்றனர்.

சுனாமிக்குப் பிறகு சுனாமி என்ற சொல் தமிழில் வழக்காற்றில் வந்தது போல , தலித் என்ற சொல் மராட்டியத்தில் உருவாகி தமிழிலும் வழக்காற்றில் வந்து விட்டது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ஒரு கலாச்சார நிகழ்வு “ என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் நூல் விமர்சனம் செய்துள்ளார். அதில், “ தலித் என்ற சொல், நமது தமிழ்ப் பேராசிரியர்களின் அனுமதி இன்றியே, மராட்டியிலிருந்து தமிழுக்கு வந்து உட்கார்ந்து விட்டது. அது முந்தைய அகராதியில் இல்லாதது “ என்று குறிப்பிடுகிறார். இந்த அகராதியில் தலித் என்பதற்கு சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல். the section of
society oppressed by the caste system  என்று சொல்லப் பட்டு உள்ளது.


இந்தியா முழுக்க உள்ள பட்டியல் இன மக்களை அடையாளம் காண, இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்த அர்த்தம் பொதிந்த தலித் என்ற சொல் பொதுப் பெயராக இருப்பது நல்லதுதான்.