Sunday, December 11, 2011

எமர்ஜென்சியில் தலித் மக்கள் பெற்ற அரசாங்க வேலை வாய்ப்புகள்


இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்றால் அது, இந்திரா காந்தி ( பிறப்பு 19.நவம்பர்.1917 இறப்பு 31.அக்டோபர். 1984 ) அவர்களை மட்டுமே குறிக்கும். அணு ஆயுதம் ஏதும் இன்றி உலகினை இந்தியாவின் பக்கம் திருப்பியவர். அவர் ஆட்சி காலத்தில் (1975) அவர் கொண்டு வந்த எமர்ஜென்சி (EMERGENCY) எனப்படும் நெருக்கடி நிலை கால தவறுகளை மட்டுமே இன்றும் பெரிதாக பலர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது நன்மைகளும் ஏற்பட்டன. இப்போதும் சிலர் மறுபடியும் எமர்ஜென்சி வரணும் சார்! அப்போதுதான் திருந்துவானுங்கஎன்று சொல்லுவதைக் கேட்கலாம்.

அந்த எமர்ஜென்சியின் போது, ரெயில்கள் குறித்த நேரத்தில் கிளம்பி குறித்த இடங்களை சரியான நேரத்தில் சென்று சேர்ந்தன. உதாரணமாக 8.05-க்கு புறப்பட வேண்டிய ரெயில் சரியாக 8.05-க்கே புறப்பட்டது. அரசு ஊழியர்கள் நேரம் தவறாமல் வேலைக்கு வந்து சேர்ந்தனர். அலுவலக நேரங்களில் அரட்டை அடிப்பது, பத்திரிக்கைகள் படிப்பது போன்ற வேலைகள் இல்லை. வெற்றிலை பாக்கு போட, புகை பிடிக்க என்று சொல்லிக் கொண்டு சொந்த வேலைகளைப் பார்க்க அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல பயந்தார்கள். அவ்வளவு ஏன், தங்களைத் தேடி தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு யாரும் வரக் கூடாது என்று ஊழியர்களே கேட்டுக் கொண்டனர். கோப்புகள் தாமதமின்றி நகர்ந்தன. லஞ்சம் என்பது பெரும்பாலும் இல்லை. சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்தார்கள். உண்மையில் அதிகாரத்திற்கும், சட்டத்திற்கும் பயந்தார்கள்..

அந்த சமயம், இந்தியா சுதந்திரம் அடைந்து 28 –ஆண்டுகள் ஆகியும் SC/ST பிரிவினர் வேலை வாய்ப்பில் டாக்டர் அம்பேத்கார் பெற்றுத் தந்த சலுகைகளை அடைய முடியாதவர் களாகவே இருந்தனர். தகுதி வாய்ந்தவர்கள் இருந்தும் அரசு அலுவலகங்களில்  (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில்) அவர்கள் நியமிக்கப் படவில்லை. வெளியில் மட்டும் இட ஒதுக்கீடு கொள்கை பேசப்பட்டு வந்தது. தாழ்த்தப் பட்ட பழங்குடி மக்களின் ஆதரவினைப் பெறவும் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்வாக்கை குறைக்கவும்  SC/ST மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நினைத்தார். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் SC/ST பணியாளர்களை சட்டப்படி நியமிக்க உத்தரவிட்டார். வேறு சமயமாக இருந்திருந்தால் உத்தரவை காற்றில் பறக்க விட்டு இருப்பார்கள். எமர்ஜென்சி நேரம் என்பதால் பொதுத்துறை அலுவலகங் களில் அந்த சமயம் SC/ST பிரிவினருக்கு ஆட்களை நியமனம் செய்தனர். பலருக்கு வேலை கிடைத்தது. அதுவரை அம்பேத்க்கார் வடிவமைத்த சட்டம் என்பது ஏட்டுச் சுரைக்காய் வடிவில்தான் இருந்தது.

இந்திரா காந்தி தொடங்கி வைத்த SC/ST யினருக்கான  வேலை வாய்ப்பு இன்றும் மத்திய அரசுப் பணி நியமனங்களில் தொடர்கிறது. சட்டங்கள் இருந்தாலும் அதனை செயல் படுத்த உறுதுணையான ஒரு அரசாங்கமும் தேவை என்பதனையே இது காட்டுகிறது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் எமர்ஜென்சி நேரத்தில் அரசு அலுவலகங்களில் SC/ST  மக்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட விவரம் இன்னும் பலருக்கு புரியாது. ஏன் தலித்துகளிலேயே பலருக்கு இந்த விவரம் தெரியாது.

No comments:

Post a Comment