Thursday, December 1, 2011

சமூக ஆர்வலர் அவதாரம்.


நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் திடீர் திடீர் என்று சமூக ஆர்வலர்கள். தனது சொந்த பணத்தில் ஒரு ரூபாய் எடுத்து பொதுக் காரியத்திற்கென்று கொடுத்து இருக்கமாட்டார்கள். அவர்களெல்லாம் சமூக ஆர்வலர் ( SOCIAL ACTIVIST ) அவதாரம் எடுக்கிறார்கள். தினசரிகளை புரட்டினால், டீவியைத் திறந்தால் அவர்கள்தான். உண்மையாகவே போராடுபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு கதர் தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டால் போதும், அவர் காந்தியவாதி ஆகி விடுகிறார். ஊழலை ஒழிக்கப் பாடுபடப் போவதாகச் சொல்கிறார். உண்ணாவிரதம் அது இது என்று தொடர்கிறார். இதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார், எங்கே போய் இருந்தார் என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது. ஏதேனும் ஒன்றைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் அவர் போராடுவார் அவர் சொல்வதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். மணிக் கணக்கில் அதைப் பற்றி பேசுவார். கொஞ்சகாலம் அடுத்த பரபரப்பான செய்தி வரும்வரை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் சந்தோஷத்தில் அமிழ்ந்து விடுவார். ஒரு நிலையான தன்மை கிடையாது.

ரோட்டில் ஆடு மாடுகள் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் ஏற்படும் விபத்துக்களை எண்ணி யாரேனும் புகார் செய்யும் பட்சத்தில் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். மாட்டின் சொந்தக்காரர்கள் ஜீவகாருண்யர்களாக மாறி தடை வாங்கி விடுவார்கள் இது மாதிரியான சமூக ஆர்வலருக்கு மனிதனை விட மாடுகள் படும் கஷ்டம் தாங்க முடியாது.     இன்னும் சில சமூக ஆர்வலர்கள் தங்கள் பெயர் பத்திரிகைகளில் அடிபட  வேண்டும் என்பதற்காகவே ஏதேனும் பீதியை கிளப்பிக் கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பார்கள். மொட்டைக் கடிதாசி போட்டே சமூக சேவை செய்யும் ஆர்வலர்களும் உண்டு. மாதம் ரெண்டு  தட்டி விட்டால்தான் அவர் பிறவிப் பயனையே அடைவார். இன்னும் சிலர் தங்கள் சொந்த பிரச்சினை தீர அதனை பொதுப் பிரச்சினையாக மாற்றி சமூக ஆர்வலராக மாறுவார். இவரால் உண்டாகும் ஜாதிச் சண்டை ஊரே பற்றி எரியும்.  சில சமூக ஆர்வலர்கள் நாளடைவில் அரசியல்வாதியாக மாறி விடுகின்றனர். அப்புறம் அவரது நோக்கமே குடும்ப நலனாக மாறிவிடுகிறது. ஆனாலும்  அனைத்து ஆர்வலர்களும் போடும் ஒரே கோஷம் “ ஒன்று படுவோம்! போராடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! “ என்பதுதான். எந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

உருப்படியான காரியங்கள் செய்யும் உண்மையான ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் விளம்பரம் இல்லாமல், சொந்தக் காசை செலவு செய்து,  செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எதனையும் எதிர்பார்க்காதவர்கள். கும்பல் சேர்க்க, கோஷம் போடத் தெரியாதவர்கள்.

எது எப்படியோ ச்மூக ஆர்வலர்களால் ஏதேனும் ( நல்லதும் அல்லாததும் ) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வைப் பாட்டி அன்றே சமூக ஆர்வலர் பற்றி சொன்ன கருத்து ஒரு தனிப் பாடலில் உள்ளது.

சித்திரமும் கைப்பழக்கம் ; செந்தமிழும் நாப்பழக்கம் ;
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் ; - நித்தம்
நடையும் நடைப் பழக்கம் ; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்             _ ஒளவையார்.

இதில் கடைசி வரியில் அவர் சொன்ன நட்பும், தயையும், கொடையும் பிறவிக் குணம் என்பதே அது.








No comments:

Post a Comment