Saturday, December 24, 2011

எனது பெரியார் நினைவு !

அன்று நான் பள்ளிச் சிறுவன். அப்போது நாங்கள் குடியிருந்த பகுதி திருச்சியில் காவிரி கரையோரம் இருந்த சிந்தாமணி என்னும் பகுதியாகும். அப்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு வரும் போதெல்லாம் எங்கள் பகுதியினுள் தண்ணீர் வந்து விடும். ஒருமுறை அவ்வாறு தண்ணீர் வந்து விட்டது. அப்போது மாலை நேரம். எல்லோரும் பெரியார் வெள்ளப்பகுதி மக்களை பார்க்க வந்து இருப்பதாகச் சொல்லி ஓடினார்கள்.என்னைப் போன்ற சிறுவர்களும் ஓடினோம். ஒரு வேன். உள்ளே கருப்பு சட்டையுடன் வெண் தாடியுடன் நல்ல நிறத்தில் ஒரு பெரியவர். அவர்தான் பெரியார். அருகில் அவர் ஆசையாய் வளர்த்த குட்டி நாய். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோரும் வணக்கம் சொன்னோம்.சிறுவர் சிறுமியர் யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும்  “என்ன படிக்கிறீங்க“ என்று கேட்டார். சிறுவர்களாக இருந்தாலும் அவர் மதிப்பு கொடுத்தார். அன்றுதான் நான் பெரியாரை முதன் முதல் பார்த்தது. (அதாவது ஐம்பது வருடங்களுக்கு முன்). அதன் பின் பெரியவர்கள் சொல்ல பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.

அப்போதெல்லாம் திருச்சியில் எந்த அரசியல் கூட்டம் நடந்தாலும் டவுன் ஹால் மைதானத்தில்தான் நடைபெறும். விவரம் தெரிய ஆரம்பித்து பெரியவன் ஆனதும் டவுன்ஹால் கூட்டங்களுக்கு சென்று வருவேன். டவுன் ஹாலில் பெரியார் பேசுகிறார் என்றால் செல்வது வழக்கம். பெரியாரின் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் திராவிடர் கழக பாடல்களை இசைத்தட்டின் மூலம் ஒலி பெருக்கியில் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது ஒலித்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் “அவர்தான் பெரியார் பார் அவர்தாம் பெரியார்என்ற பாடல்தான். அந்த பாடலை கம்பீரமாக சீர்காழி கோவிந்தராஜன் கணீரென்ற குரலில் பாடி இருக்கிறார். பாடல்கள் முடிந்ததும் பெரியார் வரும்வரை கருப்புச் சட்டை அணிந்த பேச்சாளர்கள் பேசிக் கொண்டு இருப்பார்கள். கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் கருப்புச் சட்டை இல்லாமல் வர மாட்டார்கள்.பெரியார் மேடையில் பேசும்போது தெளிவாக நன்கு புரியும்படி பேசுவார். மேலும் ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் பேசுவார்.அவர் பேசி முடிக்கும் வரை அந்த இடமே அமைதியாக இருக்கும்.

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் படிக்கும்போது அவர் பற்றிய நூல்களை, அவரது கருத்துரைகளை  நிறைய படித்தேன். காசு விஷயத்தில் மிகவும் சிக்கனம் பார்த்த பெரியார், இந்த கல்லூரி கட்ட ரூபாய் ஐந்து லட்சமும்  9.65 ஏக்கர் நிலத்தினையும் அரசுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த கல்லூரியை அரசே தொடங்கியதால் கல்விப் பயன் அடைந்தோர் அதிகம். முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்பை தொடங்கி முடித்தவர்கள் இந்த கல்லூரியில் அநேகர்.  பெரியார் ஒரு  நாத்திகர், பிராமணர்களை திட்டினார் என்ற பிம்பத்தினை மட்டுமே பலரும் காட்டுகின்றனர். அவர் சொன்ன, செய்த சீர்திருத்தங்களை சொல்வதில்லை. அம்பேத்காரை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர். பெரியாரின் வரலாறு, அவர் செய்த தொண்டு இன்றைய தலை முறையினருக்கு தெரியவில்லை. யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை. அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவே வந்து இருக்க முடியும். கடைசி வரை பதவி ஆசை என்பதே இல்லாது வாழ்ந்த தொண்டு மனிதர் அவர்.

நான் திராவிடர் கழக உறுப்பினர் கிடையாது. அதே போல அவரது கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டவனும் இல்லை. பெரியார் செய்த தொண்டினால் பலன் அடைந்தவன். பெரியார் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற மன நிறைவைத் தவிர வேறொன்றும் எனக்கில்லை. இன்று பெரியார் மறைந்த தினம். ( டிசம்பர், 24, 1973 ). அதன் எதிரொலிதான் இந்த கட்டுரை.

அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!
அன்பு மக்கள் கடலின் மீதில்!
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்!
அவர்தாம் பெரியார்!

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு!
வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு!
மிக்க பண்பின் குடியிருப்பு!
விடுதலைப் பெரும்படையின் தொகுப்பு!
அவர்தாம் பெரியார்! பார்
அவர்தாம் பெரியார்!

-         புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
   (புகழ் மலர்கள்)


2 comments:

Nambi said...

Thanks

ELANGO T said...

//Nambi said... //

எனது கட்டுரைக்கு நன்றிகள் சொன்ன நம்பி அவர்களுக்கு நன்றி!

Post a Comment