Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறும் - ஊழல் புகாரும் - உம்மன் சாண்டியும்


இப்போது கேரளாவின் காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சராக இருக்கும் உம்மன் சாண்டி, 1992-இல் அப்போதைய கருணாகரன் மந்திரி சபையில் நிதி அமைச்சர். அப்போது கேரளாவுக்கு மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. 32 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதியில் அரசுக்கு 2.32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப் பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் உம்மண் சாண்டியை விடுவித்து விட்டு அப்போதைய கேரள உணவு அமைச்சர் முஸ்தாபா மீது மட்டும் வழக்கு நடத்தப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அல்லது அ.தி.மு.க என்று மாறி மாறி ஆட்சிக்கு வருவதைப் போல கேரளாவில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுகள் ஆட்சி வரும். பின்னாளில் அச்சுதானந்தன்  (இடதுசாரி) கேரள முதலமைச்சர் ஆனவுடன் உம்மன் சாண்டியை விடுவித்தது போன்று தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று முஸ்தாபா வழக்கு தொடர்ந்தார். அச்சுதானந்தன் அரசும் மேற்கொண்டு விசாரணை நடத்த கோர்ட்டில் மனு செய்தபடியினால், உம்மன் சாண்டி உட்பட அனைவர் மீதும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

மேலே சொல்லப்பட்ட கருணாகரன் மந்திரி சபையில் அப்போது மின்வாரிய மந்திரியாக இருந்தவர் பாலகிருஷ்ணன் பிள்ளை. அவர் இடமலையாறு மின் திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே கேரள மாநில உதய நாளை முன்னிட்டு கேரள அரசு இப்போது விடுவித்தது. இது மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியது.

இதே உம்மன் சாண்டி 2005-இல் கேரள முதலமைச்சர். அப்போது    திருவனந்தபுரத்தில் இருந்த அரசுக்கு சொந்தமான திருவாங்கூர் டைட்டானிய ஆலையை சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை தடுக்க உம்மன் சாண்டி 256 கோடி ரூபாய் செலவில் மாசுக் கட்டுப்பாடு திட்டம் ஒன்றை அறிவித்தார். இதற்காக 62-கோடி ரூபாயில் வாங்கப்பட்ட இயந்திரம் பயனின்றி அப்படியே உள்ளது. இவர் அறிவித்த திட்டத்தை இவரது ஆட்சிக்குப் பிறகு வந்த இடதுசாரி கட்சி ரத்து செய்ததோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது. மத்திய தணிக்கைக் குழுவும் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டியது.  இடது சாரிகளின் ஆட்சிக்குப் பிறகு உம்மன் சாண்டி மீண்டும் இப்போது கேரள முதலமைச்சராக வந்துள்ளார்.  மார்க்சிஸ்டு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஐசக் என்பவர் இந்த ஊழலை காரணம் காட்டி உம்மன் சாண்டியை  பதவி விலக கோரியுள்ளார். எல்லா எதிர்க் கட்சிகளும் உம்மன் சாண்டிக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டின.

இந்த விவகாரங்கள் எல்லாம் இப்போது பின்னுக்கு தள்ளப் பட்டுவிட்டன. வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கேரளாவில் பிறவாகம் என்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்யவும், காங்கிரஸ் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மேல் சொல்லப்பட்ட குற்றசாட்டுக்களை திரையிட்டு மறைக்கவும் முல்லைப் பெரியாறு மலையாளி தமிழர் பிரச்சினை தூண்டிவிடப்பட்டுள்ளது.உண்மையிலேயே இடுக்கியில் நில அதிர்வு உண்டானதா அல்லது முல்லை பெரியாறு அணைக்காக கிளப்பி விடப்பட்டதா என்று ஆராய வேண்டும். இப்போது கேரளாவில் தேசிய ஒற்றுமை பேசுவோரும் , வர்க்கப் போராட்டக்காரகளும் எல்லோரும் இப்போது தமிழர் - மலையாளி என்ற உணர்வோடு மட்டுமே பிரச்சினையை பார்க்கின்றனர். போராட்டம் நடத்துகின்றனர். எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நான் கேரளா பக்கம் என்று சொல்கிறார். இங்கும் தமிழகத்தில் அதே அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்படுவது என்னவோ எளிய ஜனங்கள்தான்.


No comments:

Post a Comment